பேரூர்: மள்ளர்களின் நாற்று நடவு திருவிழா

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலும், மள்ளர்களின் நாற்று நடவு திருவிழாவும்


    சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது. கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. (Ref: http://tamilnadu-tourism.blogspot.in/2008_12_01_archive.html)


    பேரூரில் நான்கு வகைப் பள்ளர்கள் உள்ளனர். அவர்கள் முறையே கொங்குப் பள்ளர்கள், கடையப் பள்ளர்கள், சோழியப் பள்ளர்கள், பாண்டியப் பள்ளர்கள் என வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வகையினருக்கும் பதினெட்டு குடும்புகள் (ஊர்,நாடு, பட்டி, பதி, பாளையம்,வட்டகை) உண்டு. அப்பதினெட்டு குடும்பிற்க்கும் ஒரு பட்டக்காரர் என் நான்கு வகுப்பாருக்கும் சொந்தமானது பேரூர் நாட்டுத் தேவேந்திர குல வேளாளர் சமூக மடம். இம்மடத்தின் தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீன் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.(நேர்காணல்: பு.வே.அசோக் பண்ணாடி, கோவை)


நாற்று நடவுத் திருவிழா

    மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா.

    நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

(விரைவில் இணைக்கப்படும்: கோவை - நாற்று நடவுத் திருவிழா புகைப்படம்)

    தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி வைத்து இருப்பார்கள்.தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபராதனை நடைபெறும்.மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்கு சென்றனர்.

    கோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, ஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்.சுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான் எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும்.தேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்.அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரை சந்தித்து,  “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி உலா.சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும். (Ref: http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_10.html)


இந்த பொன்னேர் பூட்டும் நிகழ்வை இராமனாதபுரத்திலும் பள்ளர்கள் நிகழ்த்துவதை காணலாம்.


    பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

பேரூர் புராணம் கூறும் மள்ளர் தடங்கள்

 இயற்றியவர் கச்சியப்ப முனிவர், காலம் 18 ஆம் நூற்றாண்டு
திருநகரப்படலம் - 2 செய்யுள் 12
வில்லம்பு கொண்ட மள்ளர்
        "வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள்
         தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
         நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
         தாளொடு போர் பயில் சாலை யெண்ணில"

    "வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன.

15 சுமதி கதிபெரும் படலம்
செய்யுள் 54
மல்லர்களுடைய கற்பு நெறி
        "வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்
         ஒருவியன் பனைச் செகுத் துலப்பி றீங்குமுன்
         மருவின மின்னுநம் மாட்டு ளாரினும்
         வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ"

    "மரபும், மரபு ஒழுக்கமும், மள்ளர்களின் கற்பு நெறியோடு கேடுகள் செய்யும் ஒருவனைக் கொன்று நீக்கித் தீமைகள் பலவற்றை முன்னே எதிர்த்துப் போராடினோம் இன்னும் தீயவர் பலர் நம்முள்ளே உள்ளாராயினும் அவர்களைக் கொன்றால் கொலைப்பழி வந்து சேராதோ?" என்று தீயவர்களைக் கொள்ளத் தயங்கும் மல்லர்களின் மனநிலை குறித்து மேற்கண்ட பாடலடிகள் தெரிவிக்கின்றன.

பள்ளுப் படலம்
செய்யுள் 26
        "இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நு கமல மேழி
         வெந்திறந் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா றனைத்துமாயங்கு
         வந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி
         முத்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழி வழி வினை தொடங்கினரால்"
    இந்திரன், பிரமன்,திருமால் முதலாகவுள்ள தேவர்கள் நுகம்,கலப்பை,மேழி,கொழுவு,கயிறு,தார்க்கோல்,இடுபொருட்கள் ஆகியவற்றுடன் வந்தார்கள். மள்ளராய் முன்னே செல்லும் பட்டிப் பள்ளனாகிய சிவ பெருமானைத் தொடர்ந்து விரைந்து வந்து அவரின் ஏவல்படி வேளாண் தொழில் செய்யத் தொடங்கிய செய்தியை மேற்கண்ட செய்யுளடிகள் விளக்குகின்றன.

செய்யுள் 27
பள்ளச் சிறாரான விநாயகனும் முருகனும் வயலில் மீனும் அமையும் எடுத்து விளையாடுதல்
"கடலிடைத் துளபக் கடமுடன்பிடித்த காமுகக் கடவுளு மீனின்
              தடமுலைச் சுவைப்பால் பருகிய மணிவேற் சாமியும் பள்ளனற் சிறாராய்
              இடனகல் வயலிற் கமடமு மீனு மெடுத்தெடுத்திரும்பணைப் புறத்துத்
              திடரிடத் துரத்திக் குறுகுறு நடந்து சிறுவிளை யாட்டையர்ந் தனரால்"

    திருப்பாற் கடலிலே மாமன் திருமாலாகிய ஆமையை முன்பு பிடித்துக் கொண்டு வந்து கைலாசப் பள்ளர் பால் சேர்ப்பித்த யானை முகக் கடவுளும், மதுரை மீனாட்சி பள்ளத்தியாரின் பருத்த முலைப்பால் சுவைத்த முருகக் கடவுளும் பள்ளருடைய நல்ல மக்களாய் அகன்ற இடத்தையுடைய வயலிலே உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து எடுத்து வயற்புறங்களில் வீசிக் குறுகுறு என நடந்து சிறு குறும்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

பேரூர் கோவில் பற்றிய சிறு குறிப்பு

மூலவர்         : பட்டீஸ்வரர்
அம்மன்/தாயார்        : பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்சம்         : புளியமரம், பனைமரம்
ஊர்                : பேரூர்
மாவட்டம்         : கோயம்புத்தூர்
மாநிலம்         : தமிழ்நாடு
திருவிழா:
     திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.

தல சிறப்பு:
     சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

தலபெருமை
இறைவன் பள்ளர் சாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.
(ஆதாரம்: http://temple.dinamalar.com/New.php?id=460)


தேவேந்திர மடத்தில் உள்ள கல் சிற்பங்கள்




இந்த வீடியோ பதிவில் நிமிடம் 11.30 -12.20 வரை 'பேரூர் கோயில் குருக்கள்' மள்ளர்/பள்ளர் வரலாற்றை பேசுவதை காணலாம்.

பழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்

பழனி முருகன் கோயிலும்,
பழன மக்களான மள்ளர்களும்


    'பழனம்' என்றால் 'வயல்' என்று பொருள். வயல் சூழ்ந்த ஊருக்கு 'பழனி' என்று பெயர் ஏற்ப்பட்டது. 

        பள் > பள > பழ > பழனம் > பழனி

    'பழன மள்ளர்' என்று பேரூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் செய்யுள் 38 கூறுவது காண்க.

பழனமள்ளர்

        "மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி
        அலையினிற் கவர்ந்து கொள்ளை யாயர்தம் புறங்கண் டன்னோர்
        விளையிழு தழுதந் துயித்து மேற்சொலப் பழன மள்ளர்
        குலைதொறும் பறைக ளார்ப்பக் கொம்மென வெதிர்சென் றாரால்"

        (குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.76 )




    "மலைகளில் இருந்து வைரமும், செம்பொன்னும், யானைக் கொம்புகளும் முத்துக்களும், சந்தனம் முதலான பொருட்கள் ஆற்று நீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு முல்லை நில இடையர்களைப் புறம்கண்டு, அவர்களின் விலை மிக்க பொருளாகிய பால்,வெண்ணை இவைகளை உண்டு, மேலே பெருக்கெடுத்து வர வயல்களுடைய மள்ளர்கள் கரைகள் தோறும் பறைகள் முழங்க விரைந்து எதிர் சென்று வரவேற்றனர் என்கிறது மேற்கண்ட செய்யுள்.

    தென் பழனிப் பள்ளியின் அழகு குறித்து வையாபுரிப் பள்ளு செய்யுள் 3 கூறுவது காண்க. 

        "மஞ்சள் மணம் வீசிய மெய்யும்
         கெஞ்சிப் பேசி யாடிய கையும்
             மலைமுலையுஞ் சுமையினா னையும்
             மருங்கலகுப் பையும்
         பஞ்சிளைக் கொண்டைகளென விழியும்
         கிஞ்சுகவாய்ப் பசுங்கிளி மொழியும்
             பாக்குத் தான் தின்றபல் லொளியும்
             படர் ரோம விழியும்
         ரஞ்சித மிஞ்சிய கொண்டைச் சொருக்கும்
         மஞ்சனப் பின் புரஞ்சரிந்திருக்கும்
             நாடினவர் மணத்தை யுமுருக்கும்
             நடை செல்லுஞ் செருக்கும்
         செஞ்சந்தனப் பொட்டொளி மின்ன
         அஞ்சன மா மட மயிலென்னத்
             தென்பழனிப் பள்ளியும் வந்து
             தோன்றினாளே "

    இப்படியாகப் பழனி ஊருக்கும், பள்ளர் குலத்தாருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் சிறப்பு வாய்ந்ததாகும்.(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.67 )




    பழனி முருகன் கோயில் 'தேவேந்திர குல வேளாளருக்குச் சொந்தமானது' என்கிறார் பீபிகுளம் செல்வராசு. தமிழ் தேசியச் சிந்தனையாளரான இவர் மறவர் குலத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 'நம் வேர்கள்' (சுறவம் 2037 - பிப்ரவரி 2006 பக்கம், 12 ,13 ) மாத இதழில் அவர் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் வருமாறு:

    "சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு அரசாண்ட பரம்பரை இன்றும் மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. தமிழன் கி.பி.1528 வரை தமிழகத்தை ஆண்டு வந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றை பழனி முருகன் கோயில் கி.பி.1528 ஆம் ஆண்டு செப்புப் பட்டையம் உறுதி செய்கிறது.

வரலாறு கூறுவது என்ன?



    மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் (கி.பி.1272 - 1311 ) பின்னர் ஏற்ப்பட்ட பதவிப் போட்டியால் பாண்டியப் பேரரசு சிதைவுக்கு உட்பட்டது. அலாவுதீன் கில்சியின் போர்த்தளபதியான மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். அதே காலத்தில் சேரப் பேரரசை ரவி வர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1299 - 1311 ) சேர நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பின் சேர பேரரசு சிதைந்து சிற்றரசுகளாக தோற்றம் பெற்றன.
    இந்நிலையில் தில்லி சுல்தானாகிய கியாசுதீன் துக்ளக்கின் மகனான (பின்னால் முகமது பின் துக்ளக்) உலூப்கான் பாண்டிய நாட்டை 1323 ஆம் ஆண்டு கைப்பற்றினான். இதுவே தமிழகத்தில் அமைந்த வட இந்தியர் ஆட்சியாகும். இவ்வந்தேறி ஆட்சி 1351 வர நீடித்தது.
    விசய நகர பேரரசை கிருட்டின தேவராயர் (கி.பி.1509 - 1529 ) ஆண்டு வந்தபோது பாண்டிய நாட்டை சந்திர சேகரப் பாண்டியன் ஆண்டு வந்தான். இச்சந்திர சேகரப் பாண்டியனை சோழ அரசன் படையெடுத்து விரட்டி விட்டான். விரட்டப் பட்ட சந்திர சேகர பாண்டியன் கிரிட்டின தேவராயரிடம் போய் முறையிட்டான். அவன் நாகம நாயக்கன் என்பவனை மதுரைக்கு ஏவி மதுரை அரசை மீட்டுப் பாண்டியனிடம் ஒப்படைக்கச் சொன்னான். மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் பாண்டியனிடம் ஒப்படைக்காததால் சந்திர சேகர பாண்டியன் மீண்டும் கிருட்டின தேவராயனிடம் ஓடினான். கிருட்டின தேவராய நாகம நாயக்கனை அடக்க, அதே நாகம நாயக்கனின் மகனான விசுவநாத நாயக்கனை ஏவினான். இவ்விசுவநாத நாயக்கன் அவனுடைய அமைச்சனான தளவாய் அரியநாத முதலியார் என்னும் கயவனின் துணையுடன் 1529 ஆம் ஆண்டில் தமிழ் வளர்த்த மதுரையில் நாயக்கர்களின் வந்தேறி ஆட்சியை நிறுவினான்.
    அக்கால கட்டத்தில் சேரப் பேரரசின் சிற்றரசுகளில்  ஒன்று கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தது. இக்கால கட்டத்தில் மைசூர் நாட்டு கன்னடர்களின் படையெடுப்புகள் கிழக்கே சேலம் வரையில், தெற்க்கே பழனி வரையிலும் பரவியது. பழனி முருகன் கோயில் பறிக்கப் பட்டது. இக்கால கட்டமாகும். மதுரையில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலம் கி.பி.1529 . கன்னடர்களின் படையெடுப்பு விரிந்த பகுதி தெற்கே பழனி முருகன் கோயில் தமிழர்களிடம் (பள்ளர்களிடம்) இருந்தது. இதனை கி.பி.1528 ஆம் ஆண்டைய பழனி முருகன் கோயில் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது " என்கிறார். (நம் வேர்கள், அரிமா வளவன் ,பிப்ரவரி 2006 ,ப.12 -13 )

(பழனி செப்புப் பட்டயத்தின் தகவல்கள் http://mallarchives.blogspot.in/2012/11/blog-post.html)


    பழனி முருகன் கோயிலில் பள்ளர் குலத்தவர்களுக்கு இருந்த உரிமைகள் வடுகராட்சி ஏற்பட்ட பின் படிப்படியாகப் பறிக்கப்பட்டு முற்றிலுமாக இக்கோயிலில் இம்மக்களுக்கு இருந்த தொடர்புகள் அறுக்கப்பட்ட நிலையில் 1990 களில் குருசாமி சித்தரால் இப்பட்டையம் வெளிக்கொணரப் பட்டதால் மீண்டும் வரலாறு திரும்பியது. அக்கால கட்டத்தில் பெ.ஜான் பாண்டியன் தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் முன்னெடுத்த 'இழந்த உரிமைகளை மீட்கும் போராட்டத்தில்' பள்ளர் குலத்தவர்களுக்கு உரிமையுடைய பழனி முருகன் கோயில் சொத்தான நெல் விளையும் வயல்களும் மீட்கப் பட்டது. அவ்வாறே பிள்ளை சாதியினரால் பறிக்கப் பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திர்க்குச் சொந்தமான மடமும் மீட்கப் பட்டது. இப்போராட்டத்திற்க்குப் பின் தொடர்ந்து இன்றளவும், பழனி முருகன் கோயிலில் பள்ளர்களுக்கு முதல் மரியாதையும், மண்டகப் படி உரிமையும் வழங்கப் பட்டு வருவது என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.








மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா


    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது பாண்டிய வேந்தர்கள் கட்டியதாகும். இக்கோயிலுக்கு உரிமையுடைய அனுப்பானடித் தெப்பக்குளத்தில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு முதல் மரியாதை வழங்கும் மரபு தொன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது. மதுரை அனுப்பானடி பள்ளர்கள் குல மக்கள் தனித்தன்மையோடு வாழும் பேரூர் ஆகும். முதல் நாள் கதிர் அறுப்பு விழாவாக மீனாட்சி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இருந்து முதல் மடை திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக வரும் நீர் இவ்விழாவிற்க்காகவே அனுபபானடிப் பள்ளர்கள் உழவு செய்கின்ற வயலில் பறித்து, அதனை நட்டு, நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக மீனாட்சி தேரில் ஏறி வருகிறாள். மீனாட்சியும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து பள்ளர்களின் இவ்வேளாண் தொழிற் காட்சியினைக் கண்டு களிப்படைகின்றனர். முதல் நாள் பள்ளர் வயலில் நெற்கதிர் அறுத்துக் கதிர் அறுப்பைத் தொடங்கி வைத்த மீனாட்சி, அடுத்த நாள் தெப்பக் குளத்திலிருந்து வந்து மள்ளர் குல மன்னன் சோமசுந்தர பாண்டியருடன் தெப்பத் தேரில் அமர்கிறார். மதுரை அனுப்பானடி ஊர்க் குடும்பன் அறிவிப்பின் பேரில் அனுபபானடிப் பள்ளர்கள் ஒன்று திரள மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். தெப்பக்குள வந்து சேர்ந்த பள்ளர் குலப் பெருமக்களின் ஊர்வலத்தக் கோயில் அறங்காவலர்களும், அரசு அதிகார்களும் எதிர் நின்று வரவேற்கின்றனர். படகு ஒன்றின் மூலம் ஊர்க்குடும்பனும் இன்ன பிற பள்ளர்களும் தெப்பக்குள நடுமண்டபத்திர்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தெப்பக்குளத்தில் எதிர் எதிர்  பக்கங்களில் இரண்டு வடங்கள் இருக்கின்றன. ஒரு வடம் தெப்பக்குள நடுமண்டபத்திலும், மற்றொரு வடம் தெப்பக்குள வெளிப் பக்கத்திலும் இருக்கிறது. (நேர்காணல், முனைவர் சு.பாண்டியன், மதுரை)




(1919 ஆண்டு தோற்றம்)







வெள்ளை யானையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்திரன்: மதுரை மீனாட்சி கோவில் தெற்கு கோபுரம்


சித்திரைப் பெருவிழாவில் தேவேந்திரருக்கு பூஜை









    நடுமண்டபத்தில் உள்ள வடம் பள்ளர் குலத்தாரின் கைகளில் மட்டுமே உள்ளது. வெளிப்பக்கம் உள்ள வடம் பள்ளர் குலத்தாரால் தொட்டு கொடுக்கப்பட்ட பின் அங்கே கூடியிருக்கும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களின் கைகளிலும் கொடுக்கப் படுகிறது. இருபுறமும் வடம் இழுக்கப்பட்டு மீனாட்சி அமர்ந்திருக்கும் படகுத் தேர் தெப்பத் தண்ணீரில்  இருமுறை நடு மண்டபத்தைச் சுற்றி வளம் வருகிறது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை தேர் நடு  மண்டபத்தைச் சுற்றி வருகிறது. அதன் பிறகு அருகில் உள்ள மூர்த்தீஸ்வரர் கோயிலில் அனுப்பானடி ஊர்க்குடும்பானுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது (நேர்காணல்: சு.ப.மாரிக்குமார், மதுரை). தற்போது ஒரு சில அரசு அதிகாரிகளுக்கும் பரிவட்டம் கட்டும் முறை புகுத்தப்பட்டுள்ளது. குல அடிப்படையில் பள்ளர்களுக்கே பரிவட்டமும், முதல் மரியாதையும், வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அக்கினி வீரன் என்ற பள்ளர் குல இளைஞர் அனுப்பானடி ஊர்க்குடும்பனாக உள்ளார். கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களும் சொத்துகளும் இப்போதும் பள்ளர்களுக்கே சொந்தமாக உள்ளது. (நேர்காணல்: முனியசாமி, அனுப்பானடி, மதுரை)


மதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:
    "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது. 

    மீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது

(தற்காலிக வயல்)
அந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் பிறகு,

 மாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது

     இந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கேவடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார்தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்புமீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது."

மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்.

பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்


பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்


    மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் 'முருகன் கோயில்' என்று தற்போது வழங்கப்படும் கோயில் பாண்டிய அரசன் நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் அவனது படைத்தலைவனான சாத்தான் கணபதியால் கலியாண்டு 3874 இல் (கி.பி.773 ) தோற்றுவிக்கப் பட்ட மிக அழகியதோர் குடைவரைக் கோயிலாகும்.(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ) பாண்டியர் குடைக் கோயில்களுள் சிற்ப அமைப்பிலும், செறிவிலும் இக்கோயில் ஈடு இணையற்றது ஆகும்.

    பாண்டிய நாட்டின் சிறப்பு வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1050 அடி உயரத்தில் இருக்கும் இவ்வூரில் உள்ள மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இவ்வூர் மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்காலம் முதற்கொண்டே பெருமையுற்றுத் திகழ்கிறது. (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.6 ) மலையடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலின் பெரும் பகுதி மலையின் வட பகுதியில் இணைந்துள்ளது. மேற்கு பகுதியில் இருந்து மலையின் நடுப்பகுதி வரை ஏறிச் செல்லச் சிறிய படிக்கட்டுகள் செங்குத்தான பாறையில் அமைக்கப் பட்டுள்ளன. மலை மீது ஒரு குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. அதில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் வருமாறு.
        "எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன் செய்த
         ஆய்சதன நெடுஞ்சாதனம்" 

(குருசாமி சித்தர், தே.ஞானசேகரன், மீண்டெழும் மள்ளர் வரலாறு,ப.39 )



    என்று ஈழக் குடும்பிகன் என்ற ஈழ நாட்டுப் பள்ளர் குலத்தவன் செய்வித்த கற்படுக்கை கொடை பற்றி மேற்கண்ட பொறிப்புகள் தெரிவிக்கின்றன.இக்குகையில் பல ஆட்கள் தங்குவதற்கு இடமுண்டு.இந்த குகை 'பஞ்ச பாண்டவர்' குகை என்று இப்போது அழைக்கப் படுகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.13 ).மலை உச்சியில் சுனை ஒன்று உள்ளது. இச்சுனையில் உள்ள மீன்கள் வனப்பு வாய்ந்தவை. மலை உச்சியில் இசுலாமியர் வழிபடக்கூடிய 'பள்ளி வாசல்' ஒன்றும் உள்ளது. இந்த மலையை 'சிக்கந்தர் மலை' என்றும் இசுலாமியர்கள் அழைத்தனர் போலும். தமிழகத்தில் வாழ்கின்ற இசுலாமியர்கள் பெரும்பாலும் பள்ளர்களே என்பது அறிந்ததே. இக்கோயிலில் பள்ளர்களுக்கு உரிய உரிமை மறுக்கப் பட்ட போது இம்மக்கள் இசுலாத்திற்கு மாறித் திருப்பரங்குன்றத்திற்கு மேலேயே பள்ளிவாசலை கட்டியிருக்க வேண்டும்.

    ஆண்டிற்கு ஒருமுறை புரட்டாசித் திங்கள் மலைக்கு மேல் முருகனைப் பல்லக்கில் கொண்டு சென்று விழா நடத்தப் படுகின்றது. 'உலகெல்லாம் வாழ, மழை பெய்ய வேண்டி'  இவ்விழா நிகழ்வதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் இவ்விழாவானது இந்திரா விழாவின் எச்சமாக விளங்குகின்றது என்பது தெளிவு.

    இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் "சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ).

    திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவர முடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை மழவராயனுடைய வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது. 'மழவர்' என்பது மருத நில மள்ளரை குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும்.

    முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 15 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று 'பூவின் கிழத்தி' என்ற மெய்க்கீர்த்திப் பகுதியோடு தொடங்குகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.23 ). கிழவன்,கிழத்தி என்பது மருத நிலத் தலை மக்களான மள்ளர் குலத்தோரின் பெயர்களே என்பதையும் இங்கனம் எண்ணல் வேண்டும். திருப்பரங்குன்றம் உடையார் கோயில் நிர்வாகத்தினரான குலசேகரபுரத்தார்க்கு நிலம் விற்பனை செய்ததையும் கல்வெட்டுக் (ARE 240 /1941 -1942 ) குறிப்புக் கண்டு உணர்த்துகிறது. குலசேகரபுரம் என்ற ஊர்ச்சபையினரால் கோயிலுக்கு நிலம் திருவுண்ணாழிகை நல்லூர் என்ற ஊர் வழிபாட்டிற்காக வழங்கப் பட்டமையும் கல்வெட்டால் (ARE 245 1941 - 1942 ) அறியப்படும் செய்தியாகும் (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.24 ).

    "தேவேந்திரன் தன் பகைவனாகிய சூரபன்மனை அழித்து விண்ணுலக அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய முருகப் பெருமானுக்குத் தன மகள் தெய்வானையைத் திருமணம் செய்விக்க விரும்புகிறார். நாரதர்,நான்முகன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ள முருகப் பெருமான் தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்கிறார்" என்ற செய்தி புராணங்கள் மூலம் அறியப்படும் உண்மைகளாகும். மேலும், கருவறையில் உள்ள யானை தேவேந்திரனின் ஐராவதம் என்றும், தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகனுக்குத் தொண்டு புரிய வந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.27 ). 'ஐராவதம்' என்னும் பெயரில் மதுரை மாநகருக்குள் 'ஐராவத நல்லூர்' என்ற பள்ளர் ஊர் ஒன்று உள்ளதென்பதை இங்கே நினைவில் கொள்வதென்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

    நக்கீரர் இயற்றிய முருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்ப்பாடலும்; மருதநில நாகனார் எருக்காட்டூர் தாயங்கண்ணார் இயற்றிய அகநானூறு பாடல் 149 ; மருத நிலா நாகனார் பெருங் கடுங்கோன் இயற்றிய கலித் தொகை பாடல் 27 ,93 ; சங்கப் புலவர்கள் இயற்றிய பரி பாடல் 6 ,8 ,14 ,17 ,18 ,19 ,21 ; மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி பாடல் 262 முதல் 270 வரை; திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருவிடை மருதூர் பதிவகம்) பாடல் 165 ; சுந்தரர் இயற்றிய தேவாரம்; மாணிக்க வாசகர் இயற்றிய திருக்கோவையார் பாடல் 11 ,144 , 178 ,292 , 299 ; சேக்கிழார் இயற்றிய திருவிளையாடற்ப் புராணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் திருப்பரங்குன்றத்தின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன.
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம் பாடல் 11 இல் இடம் பெற்றுள்ளன.
        "உலகாண்ட மூவேந்தர் முன்னே
         மொழிந்த..."

 (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.30 )

    என்ற அடியால் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் எனத் தெரிகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப் அப்டியில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறும் போது 'மலையின் அடிவாரத்தே வளமான வயல்கள் உள்ளன. நீர் நிறைந்த பொய்கை உள்ளது. சுனைகளில் பல மலர்கள் நிறைந்துள்ளன' என்பன போன்ற மருத நில மாட்சிகளைக் காட்சிப் படுத்துகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயிலாகத் தோற்றம் பெற்ற திருப்பரங்குன்றம் கோயில், பிற்கால பாண்டியர் காலத்தில் சிறந்து விளங்கியது. பாண்டியராட்சி முடிவுற்று வடுகராட்சி நிலவி வந்த காலகட்டங்களில் இக்கோயிலில் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு இருந்து வந்த பல்வேறு உரிமைகளும் மறுக்கப் பட்டன. இதன் எச்சமாகப் பள்ளர் குலத்தார்க்குப் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யும் முறை இக்கோயிலில் இப்போதும் நடைபெற்று வருவதென்பது கண்கூடு. இந்த உண்மை வரலாறு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் போது தற்போதைய கோயில் நிருவாகத்தினரால், பாண்டிய மண்ணை ஆண்ட மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் 'பரிவட்டம்' கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது.

    முருகன் தெய்வானை திருமண விழா நடைபெற்ற பின்னர் இப்பரிவட்டம் கட்டும் விழா நடைபெறுகிறது. தெய்வானை தேவேந்திரனின் மகள் என்பதால் முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பின் 'மறு வீட்டிற்கு அழைத்தல்' விழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' அழைத்து வந்து விழா நடத்தப் படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது ஆண்ட மரபினரின் அடிச்சுவட்டியானை அறிய உதவுகிறது. (நேர்காணல், ச.நாகராசு, சுந்தராம்பட்டி, திருமங்கலம்)




    முருகன் தெய்வானை 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' மறு வீடு வருதல் நிகழ்வு முடிந்த பின், அருகேயுள்ள காவல் தெய்வமான கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பரிவட்டம் கட்டும் விழா தொடங்குகின்றது.

    மதுரை மாடக்குளம் மரபு வழி ஊர்க்குடும்பனாருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிருவாகத்தினரால் முறைப்படி முதல் மரியாதையோடு 'பரிவட்டம்' கட்டப் படுகிறது

பின்னர் மாடக்குளம் ஊர்க்குடும்பனார் திருப்பரங்குன்றம் விளாச்சேரி,பழங்காநத்தம்,அனுப்பானடி, மாடக்குளம், அவனியாபுரம் ஆகிய ஐந்து பள்ளர் ஊர்களைச் சேர்ந்த ஊர்க் குடும்பனார்களுக்குப் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.

    தற்போது  மதுரை மாடக்குளம் ஊர்க்குடும்பனாகத் தொழிலதிபர் வி.கே.துரை,உதயகுமார் என்பவரும், திருப்பரங்குன்றம் ஊர்க்குடும்பனாராக தவமணி, ஆதிமூலம், தனபால் ஆகியோர் ஆண்டிற்கு ஒருவர் என்ற சுழற்சி முறையிலும், விளாச்சேரி ஊர்க்குடும்பனாராகப் பெரிய குடும்பனார் தவமணி என்பாரும், பழங்காநத்தம் ஊர்க்குடும்பனாராக முத்து என்பாரும், அனுப்பானடி ஊருக்குடும்பனாராக அக்கினி வீரன் என்பாரும், அவனியாபுரம் ஊர்க்குடும்பனாராக பால சுப்பிரமணியன் என்பாரும் பதவி வகிக்கின்றனர். இவ்வூர்க் குடும்பனார் பதவி என்பது வாரிசுரிமைப் படி வழங்கப் படுகிறது. இம்முறையானது பாண்டிய மரபினர்கள் பள்ளர்களே என்பதை மெய்ப்ப்கின்றது. (நேர்காணல், ப.ராம்குமார்,வத்தலகுண்டு)

    பள்ளர் குலத்தாரின் 'பரிவட்டம்' மரபுரிமை முறையானது பாண்டியர் மரபு வழி அரசுரிமை கொண்டாடும் முடிசூட்டும் விழாவின் தொன்று தொட்டுப் தொக்கி நிற்கும் நிகழ்வென்பது இங்ஙனம் உறுதி செய்யப் படுகின்றது. இதம் மூலம் மதுரை மாடக்குளம் பாண்டியராட்சியின் போது நிருவாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததென்பது தெரிய வருகின்றது. பாண்டியர் காலச் செப்பேடுகளில் 'மதுரை மாடக்குளம்' இடம் பெற்றுள்ளது என்பது இவ்வரலாற்றுக் கருதுகோளுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கும் சான்றாதரமாகும்.

    திருப்பரங்குன்றம் கோயில் முன் பகுதியில் கிழக்கு திசையில் பள்ளர் தெரு உள்ளது. தற்போது இங்கே 100 வீடுகள் உள்ளன. இதில் 25 குடும்பங்கள் நிலக்கிழார்களாக உள்ளனர். இன்றளவும் இக்கோயில் நிலங்கள் ( 4 ஏக்கர் ௦௦ 0.7 சென்ட்) (சர்வே எண்: 348 - 1 , 348 - 5 ) பள்ளர்களுக்கு உரிமையுடையதாக உள்ளது. இந்நிலங்கள் காயாம்பு,வரதாரம் (348 /1 இல் 1 -91 ஏக்கர்), அருணாச்சலம் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்), இருளன் (348 /1 இல் 1 - 06 ஏக்கர்), மலையடியான் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்) என ஐந்து பள்ளர்களின் பெயர்களில் உள்ளது. இந்நிலங்களை இவ்வுரிமையாளர்களில் ஒரு சாரார் கமுக்கமாக 27 .07 .1955 அன்று துரைச்சாமி பிள்ளை மகன்கள் முத்தையா பிள்ளை,கந்தசாமி பிள்ளை ஆகியோருக்கு விற்று விட்டனர். இதனை அறிந்த மற்றொரு சாரார் வழக்கு தொடுத்து (வழக்கு எண்: பிரிவு 8 (2 )(1 ) பி-யின் கீழ் 348 /1 பாகம் 0 -32க்கு சட்டம், பிரிவு 21 8 (2 ) (11 ) - இன் கீழ்) நிலத்தை மீட்டனர். பண்ணைப் பள்ளனான நிலக்கிழார் ம.மணி என்பவர் மலையடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பூசகராகவும் விளங்குகின்றார். இவர் பூணூல் தரித்துள்ளார். இஃது தமிழர் மரபாகும்.

    திருப்பரங்குன்றம் கோயில் மதுரை மீனாட்சி சுந்தர பாண்டியன் கோயிலின் துணைக் கோயிலாக உள்ளதென்பதைக் கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பெரிய தேரோட்டும் உரிமையை இடைக்காலத்தில் பள்ளர்கள் இழந்துள்ளனர். சிறிய தேரோட்டும் போது பள்ளர்கள் முதல் மரியாதை பெற்று தேரோட்டுகின்றனர்.

    ஆண்டிற்கு இரு முறை கார்த்திகை தை மாதங்களில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயில் ஆவணங்களில் பதிவு பெற்றுள்ள 'பண்ணைப் பள்ளன்' மிராசு (நிலக்கிழார்) கந்தக் குடும்பன் மகன் மலையடியான் என்பாரது மகன் மணி என்னும் பள்ளர் குலத்தவர் 'வெள்ளை வீச' தேவேந்திரர்களின் தேர் தெரு வீதிகளில் உலா வருகிறது. திருப்பரங்குன்றம் பள்ளர் தெருவில் சாவு விழுந்தால் கோயில் வாயிலுக்கு மேள தாளத்துடன் சென்று இறந்தவர் ஆணாக இருந்தால் ஒரு வேட்டியும், மாலையும், பெண்ணாக இருதால் ஒரு மாலையும், சேலையும் பெற்றுக் கொண்டு பின்னரே இறந்து போன பள்ளர்-பள்ளத்தியரின் உடலங்கள் சவ அடக்கம் செய்யப் படுகிறது. இவ்வழமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பாண்டியர்களால் கட்டப் பட்ட திருப்பரங்குனறம் கோயிலுக்கு பள்ளர் குல மக்களுக்குமான உறவுகள் இவர்களே பாண்டியர் மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.




இராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா

இராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா 


    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் என்று அழைக்கப்படும் பேரூரின் வரலாற்றுப் பழம் பெயர் பள்ளர் பாளையம் என்பதாகும். இவ்வூர் 'பழைய பாளையம்' என்றும் அழைக்கப் படுகிறது. 1965 ஆம் ஆண்டைய வருவாய்த்துறை ஆவணங்களும், பதிவேடுகளும் இதற்க்குச் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப் பட்ட வடுகக் குடியேற்றங்களின் போது 'இராசூக்கள்'  என்ற தெலுங்கர்கள் வந்த பின் பள்ளர் பாளையம் என்பது இராசபாளையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. பள்ளர் பாளையத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியே பள்ளர்கள் வாழக்கூடிய ஏழு பெரும் தெருக்கள் உள்ளன. இம்மக்களின் நிருவாக வதிக்காக இவர் தம் முன்னோர்களால் கட்டி எழுப்பப்பட்ட பழமையான தேவேந்திர குல வேளாளர் சமூகக் கூடம் ஒன்று பேருந்து நிலையம் அருகிலேயே இப்போதும் இருப்பதைக் காணலாம். இந்நகரில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் பள்ளர் குலப் பெருமக்களால் வெண்கொற்றக்குடைத் திருவிழா நடத்தப் பெறுவது வழக்கம்" (நேர்காணல், தே.இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)







    பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டுத் தனது கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்தரைப் பிறப்பன்று வெண்குடைத் திருவிழாவைப் பள்ளர் குல மக்கள் கொண்டாடி வருகின்றனர். கண்ணகியின் கால் சிலம்பு, தாலிக்கயிறுடன் வெண்கொற்றக்குடை  ஏந்தி பள்ளர்கள் உலா வருவது வழக்கம். பறையர் குலப் பெண்ணின் தாலிக் கயிற்றை பள்ளர் குலத் தலைவனான குடும்பனாரின் இடது காலில் கட்டி விடுவதும், அதனைப் பறையர்கள் அவிழ்க்க வருவதும், அதனால் பள்ளர், பறையர் சாதிய மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இது தமிழ் சாதியினரைப் பிரித்தாளும் வந்தேறிகளின் வடுகச் சூழ்ச்சி என்பதனையும், வலங்கை, இடங்கைப் பிரிவின் நீட்சி என்பதனையும் அறிய முடிகிறது.



    இராசபாளையம் அருகேயுள்ள சுந்தரராசபுரத்தைச் சேர்ந்த பள்ளர்களுக்கு வழிவழியாக வெண்கொற்றக்குடை பிடித்து ஆடும் இவ்வுரிமை இருந்து வந்தது. சுந்தரராசபுரம் என்பது சுந்தரபாண்டியனின் பெயரைத் தாங்கிய ஊர் என்பதுவும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும். இவ்வூரைச் சேர்ந்த செம்புலிச் சித்தன் என்பவரும், அதன் பின்னர் அவரின் மகன் கந்தக் குடும்பனும், அதன் பின்னர் கந்தக் குடும்பனின் மகன் பிள்ளையார் என்பவரும் குடை பிடித்து ஆடி வந்தனர். பிள்ளையார் என்பவருக்கு அகவை 70ஐ தாண்டியதால் அவரால் குடை பிடித்து ஆட முடியவில்லை. அதனால் 2010 ஆம் ஆண்டு இராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு என்னும் குமரன் தெருவைச் சேர்ந்த அதிவீரப்புலவர் என்னும் பள்ளர் குலத்தவரும் வெண்கொற்றக்குடை பிடித்து ஆடினர்.



    காலையில் தொடங்கிய விழாப் பேரணி பெரிய கடை வீதி, சுரைக்க்காயபட்டித் தெரு வழியாக முடங்கியார் சாலை சென்று இராசூக்கள் கல்லூரி அருகேயுள்ள நால்வாய்க் குறடு சென்றடையும், விழாக் குழுவினராக விளங்கக் கூடிய முகமையான ஊர்க் குடும்பனார்கள் முன் செல்வர். அவர்களோடு ஒப்பனை செய்யப் பட்ட யானை உடன் செல்லும். (நேர்காணல்: தா.வெள்ளையப்பன், இராசபாளையம்)



    யானையின் மீது பள்ளர் குல மக்களின் சமூகக் கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி பறக்கும். விழாவில் ஆலியாட்டம்,கரகாட்டம்,கோலாட்டம் உறுமி மேளம் இடம் பெறுவது வழக்கம். (நேர்காணல், மாடசாமி ,திருவில்லிபுத்தூர்)



    நால்வாய்க்குறடு சென்றபின் அங்கிருந்து பூசகர்கள், அருளாடிகள், ஊர்க்குடும்பனார்கள் மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள நீர்காத்த ஐயனார் கோயிலுக்குச் செல்வர். அங்கேயுள்ள சின்ன ஒட்டக்காரன், பெரிய ஒட்டக்காரன், வனப்பேச்சி,மாடத்தி,ஏழு கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி, சிறப்புப் பூசை நடத்தக் குடமுழுக்கு நீர் எடுத்து, மீண்டும் நால்வாய்க்குறடு வந்தடைவர். அன்று மாலை நகருக்குள் வரும் வழியில் ஊரணி வளாகத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் வழிபட்டு விட்டு, வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள ஐயனார் கோயிலை வணங்கி விட்டு, முடைங்கியார் சாலை வழியாக மீண்டும் தேவேந்திர குல வேளாளர் ஊர்ச் சாவடிக்கு வந்து சேர்வர். மறுநாள் பூபால்பட்டி தெருவில் உள்ள பெரிய வீடுவரை சென்று வருவது வழக்கம். (நேர்காணல், தே. இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)



    கடந்த ஆண்டு 322 ஆவது வெண்கொற்றக்குடைத் திருவிழா கொண்டாடப் பட்டுள்ளது. இது பள்ளர் குல மக்களின் வரலாற்றுப் பெருமையை உணர்த்துவதாய் உள்ளது.

சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்


சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்



    தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கரன் கோயில். இக்கோயில் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் வழங்கி வருவது சிறப்பு. உக்கிரப் பாண்டியனால் ஏறத்தாழப் தொள்ளாயிரத்து நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயில் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோயிலின் வலப் பக்கமுள்ள தூணில் உக்கிர வ்ழுதிப் பாண்டியனது திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    சாலிவாகன சகாப்தம் 945 (கி.பி.1022 ) கொல்லம் 199 இல் மதுரைப் பாண்டிய அரசனான உக்கிர வழுதிப் பாண்டியன் திருநெல்வேலிக்கு வடக்கேயுள்ள மானூருக்கு வந்து, அதனருகே 'உக்கிரங் கோட்டை' அமைத்து அரசாண்டான். அக்கால கட்டத்தில் தான் சங்கரன் கோயிலையும் கட்டியுள்ளார். சகாப்தம் 1095 கொல்லம் 349 இல் சீவலமாற பாண்டிய மன்னன் வள்ளியூருக்கு வந்து திருப்பணி செய்து, பிற்பாடு சங்கரன் கோயிலும் திருப்பணிகள் செய்துள்ளார். அதன் பின் மானூரை விரிவுபடுத்தி, அவ்வூரில் ஒரு குளமும் வெட்டினார். இச்செய்திகளைக் கோயிலில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )மேற்கண்ட பாண்டியரின் ஆட்சிப் பகுதியான மானூர் இன்றும் பள்ளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பேரூர் என்பதையும், சீவலமாற பாண்டியனால் வெட்டப் பட்ட குளத்தில் உள்ள தூணில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு பாண்டியர் வரலாற்றை அறிய உதவும் சான்று என்பதையும், பாண்டியர்களின் படைத்தளமாக விளங்கிய உக்கிரன்கோட்டை பள்ளர்களின் கோட்டை என்பதுவும் வரலாறு.

    உக்கிரவ வழுதிப் பாண்டியன் காலத்தில் கரிவலம்வந்தநல்லூர் நகரை ஆண்ட பிரகத்துவச பாண்டியனும், இக்கோயிலில் திருப்பணிகள் செய்துள்ளார் என்பதும், இப்பாண்டிய மன்னரின் மகனே விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரன் கோயில் இருக்கும் இடம் கரிவலம்வந்தநல்லூருக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் புராணத்தால் புலப்படும் செய்திகளாகும். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )


மரபு வழிச் செய்திகள்


    "மானூரை ஆண்ட உக்கிர வழுதிப் பாண்டியன் மதுரை மாநகர் சென்று மீனாச்சியம்மையையும் , சொக்கப் பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். மணிக்கிரீவன் என்ற தெய்வம் பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகிப் புன்னை வனக் காவலனாக இருந்தான். அதனால், அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்த நல்லூர் புன்னை வனத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்க்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு புறத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. காவற் பறையன் புற்றை வெட்டிய போது புற்றினுள் இருந்த பாம்பின் வாழும் வெட்டப் பட்டது. அப்போது, அவன் அங்கே சிவனின் காட்சியைக் கண்டான். அந்த வேளை உக்கிர பாண்டியன் அடுத்த வனத்தில் இருந்ததை அறிந்து தான் கண்ட காட்சியைச் சொல்ல ஓடினான். அன்று பாண்டியருடைய யானைத் தந்தத்தினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் அது கண்டு செய்வது அறியாது திகைத்து இருந்த போது காவற் பறையன் ஓடி வந்து அரசரிடம் செய்தியைத் தெரிவித்து உடன் வர அழைத்தான். உடன் சென்ற உக்கிர பாண்டியர் புற்றினையும், புற்றிடம் கொண்டாரையும், கூழை வாலினதாக்கிய பாம்பினையும் கண்டார்.







    சங்கரனார் கட்டளையிட உக்கிர பாண்டியர் காடு கொன்று நாடாக்கி, மருத நிலம் சமைத்து, ஊர் அமைத்துக் கோயில் கட்டி ஆட்சி செய்தார். உக்கிர பாண்டியனின் யானை தந்தத்தினால் குத்திய இடத்தில் தோன்றிய ஊருக்கு பெருங்கோட்டூர்  எனப் பெயர் ஏற்பட்டது. உக்கிர பாண்டியன் கோவிற் பூசைக்குப் பெரும் நிலங்களைக் கொடுத்து; ஒரு சித்திரை மாதத்தில் யானை மேல் ஏறி இறைவனைக் காணக் காரணமாக இருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப்  போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டு வந்து பெரு விழா நடத்தி மகிழ்ந்தார்" என்று மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.10 )

    மேற்கண்ட மரபு வழிச் செய்தியில் யானை தந்தத்தால் குத்திய இடத்தில், தோன்றிய பெருங்கோட்டூர் பள்ளர் குலத்தாரின் பேரூராகும். பழம் பெரும் இவ்வூரில் பள்ளர்களின் குடியிருப்பு ஏற்ப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிற்ப்பாடே அங்கே மறவர் குடியேற்றம் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.





    "இந்திரனுக்குத் துன்பம் இளைத்த மாயாசுரனைத் தொலைக்கக் கோமதியம்மாள் ஏவிய மாயவாயு திக்கில் மலையாக இருந்தது" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.5 )என்ற செய்தியையும் "தேவேந்திரன் மகனாகிய சயந்தன் காக்கை உருவாகிச் சீதையின் தனத்தில் கொத்தினான். அதையறிந்த இராமபிரான் ஓர் அம்பை அவன் மேல் ஏவினான். சயந்தன் காக்கை உருவம் நீங்கமலேயே நின்றான். இதனால் இந்திரனால் ஏவப்பெற்று, அவன் தந்த முத்து மாலையைச் சங்கரருக்குச் சாத்தி, வழிபாட்டுத் திருவருள் பெற்றதால் முன்னைய உருவம் அடைந்தான்" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.11 ), என்ற செய்தியையும் சங்கரன் கோவில் தல வரலாறு குறிக்கின்றது. இந்திரனைப் தரம் தாழ்த்தும் பிராமணியத்தின் பிற்போக்குத் தனம் இக்கட்டுக் கதையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவ வழிபாட்டிக்கு மாற்றப் படுவதற்கு முன்னர் அங்கே இந்திரா வழிபாடு இருந்தது என்பது தெளிவு.


கல்வெட்டுச் செய்திகள்


    சங்கரன்கோயிலில் பழங்காலப் பாண்டியரலால் கட்டப் பட்ட மண்டபங்களும், அவைகளில் உள்ள சிற்பச் சிலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. 1506 ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் சங்கரன்கோயிலில் காணப்படுகின்றன. இது இவரது 33 வது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளில் பராக்கிரம பாண்டியன் நிலக்கொடைவழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510 இல் அவனது 26 ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி.1562 -1605 வரை அதிவீரராம பாண்டியன் சங்கரன் கோயில் பகுத்யை ஆட்சி செய்துள்ளான். இவனே கழுகுமலைப் பகுதியையும் ஆண்ட பாண்டிய மன்னனாவான். சங்கரன் கோயிலின் வடக்குப் பக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகர பாண்டியன் சகம் 1475 ஆகிய தனது மூன்றாவது ஆட்சியாண்டில் கோட்டூர் என்னும் ஊரை இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது.( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )


மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு)

"
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே
தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன்
தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த
வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக்குடும்பனும் அல்ல கர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த  பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த
 மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக்
 கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப்
படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும்
 இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த
 வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்"
 ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )
    என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நலூரிக் கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )

    மேற்கண்ட கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள பாண்டியன் தேவேந்திரனோடே கூடியிருக்க என்ற செய்தியும் தேவேந்திரக் குடும்பன் உக்கிரப் பெரு வழுதியோடும், சோழனோடும், சேரனோடும் உறவுப் படுத்துகின்ற செய்தியும் தேவேந்திரர்களுக்குப் பஞ்சவன் விருது வழங்கப்பட்ட செய்தும் பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.

    தமிழகத்தில் நெல்லை முதன் முதலாய்ப் பயிர் செய்தவர்கள் பள்ளர்களே எனக் கூறும் கரிவலம்வந்த நல்லூர்க் கல்வெட்டும் ( ARE 432 /1914 ) திருவில்லிப் புத்தூர்க் கல்வெட்டும் (ARE 588 /1926 ) பள்ளர்களைப் பாண்டியன் உக்கிரப் பெரு வலுதியுடன் தொடர்புபடுத்துகின்றன.

    சங்கரன் கோயில் தேர் மிகப் பெரியதாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். தென் பாண்டி நாட்டிலுள்ள பழம் பெரும்கொயிலில் தேரோட்டும் உரிமை காந்திநகர்ப் பள்ளர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தேர்த் திருவிழாவின் போது தேவேந்திர குல வேளாளர்களின் சமூக கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி தேரில் பறக்க விடப்படுவதும் வழக்கில் உள்ளது. (நேர்காணல், வழக்குரைஞர், மா.கலைமணி, அழகநேரி, சங்கரன் கோவில்)

    கரிவலம் வந்த நல்லூர்க் கோயிலில் ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களில் ஆண்டிற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். இக்கோயிலும் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை கரிவலம் வந்த நல்லூர் பச்சேரி பள்ளர்களுக்கும், ஒப்பனையாள்புரம் பள்ளர்களுக்கும் உடையதாகும். கோயில் முன்புறம் 'தேவேந்திர குல வேளாளர்' சமூக மடம் உள்ளது. தற்போது வங்கி இக்கட்டிடத்தில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் பத்தாம் திருவிழா பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு உரியதாகும்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும். பெரும்பள்சேரி, வடக்குக் கரிசல்குளம், ஆகிய இரு ஊர்ப் பள்ளர்கள் இக்கோயிலில் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை உடையவர்களாக உள்ளனர்.நாணல் புல், மூங்கில் ஆகியவற்றை கோயிலுக்கு வழங்கும் முறையும் பள்ளர்கள் வழி வழியாகப் பின்பற்றி வந்தனர். இதற்காக கோயில் நிருவாகத்தில் இருந்து பள்ளர்களை வெற்றிலை,பாக்கு வைத்து அழைத்தனர். இம்மரபு வழக்கமானது இன்று வரை நீடித்து வருகிறதென்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பள்ளர்கள் இறந்தால் திருவில்லிப்புத்தூர் கோயிலில் பூசை நிறுத்தப் படும். இறந்தவர்களுக்கு கோயிலில் இருந்து வேட்டி,துண்டு,நெருப்பு ஆகியவை கொடுத்து அனுப்புவது இன்றும் நடைமுறையில் உள்ளது. தற்போது கோயில் நிலமான 12 குறுக்கம் வயல்களை பள்ளர்கள் தமக்குச் சொந்தமாக பயிர் செய்து வருகின்றனர். திருவில்லிப்புத்தூரைச் சுற்றிலும் பள்ளர் ஊர்களே ஏராளம் உள்ளன. இக்கோயில் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையாக உள்ளது.


சங்கரநாராயண சுவாமி கோயிற் புராணம்


    இப்புராணத்தை இயற்றியவர் சீவல மாற பாண்டியராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சங்கரன்கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வம் சங்கரலிங்கப் பெருமாளும், ஆவுடையம்மாளும் ஆவர். இந்நூலில் கடவுள் வணக்கப் பாடலில் 'மல்லர்' என்றும், திருநாட்டுச் சருக்கத்தில் எட்டுப் பாடல்களில் மள்ளர்,மள்ளியர் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளது. அது பற்றி இங்கே பார்ப்போம்.



பாயிரம் - கடவுள் வணக்கம்
செய்யுள் 4 
கருணைக் கடல் மல்லர் சிவபெருமான் 
        "நீர்கொண்ட செலுஞ்சடை மேனிலவுமிழ்வெண் பிறை வயங்க நெடுவான் பூத்த,
        வேர்கொண்ட தாரகையினிடை இடையே தவலமுகை யீன்று தோன்றுங்,
        கார்கொண்ட புன்னை வனங்காமுற்று வாழ்கருணைக் கடலை மல்லற்,
        சீர்கொண்ட சீராசைத் திருநகர் வாழ் சிவக் கொழுந்தைச் சிந்த செய்வோம்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.199 .)

    கங்கையைத் தலை முடியிலே கொண்டவரும், குளிர்ந்த ஒளிக்கதிர்களை வீசும் வெண்பிறை விண்ணிலே பூத்தது போல் தன தலையில் விளங்க வைத்திருப்பவரும் கருணைக் கடலாம் மல்லர் சிவபெருமான் வாழும், அகண்ட வெளியிலே அரும்பு பூத்தது போல் நட்சத்திரங்கள் தோன்றும், மேகங்கள் மழைபொழியும், புன்னை மரங்களும், பூத்து மலரும் பூக்களும் நிறைந்த காடு கொண்ட, சீர் கொண்ட, திருநகர் சங்கரன்கொயிலை மனதில் நினைத்துக் கொள்வோம்" என்ற பொருளில் மேற்கண்ட செய்யுள் பொருள் தருகின்றது.


திருநாட்டுச் சருக்கம்
செய்யுள் 5 
மள்ளர்கள் வெள்ளத்தை அடக்குதல்
        "மதத்த யானையைப் பாகர்கள் வசப்படுத் துதல்போற் 
         கதத்தின் மேவிய வெள்ளத்தைக் கால் குளங் களினால்
         விதத்தி லேலேச் செலுத்திவன் சிறைபுரிந் திரும்பின்
         பதித்த மள்ளர்க ளுழுதொழின் முயற்சியிற் பயின்றார்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)

    மதம் பிடித்த யானையைப் பாகர்கள் கட்டுப்படுத்துவது போல், சீறிவரும் வெள்ளத்தைக் கால்வாய்,குளங்களிலே சீராகச் செல்லும்படி செலுத்திச் சிறைப்படுத்திய இரும்பைப் போன்ற வலிமை மிக்க கால்களையுடைய மள்ளர் குலத்தார், பின்னர் அந்த நீரை வயல்களிலே பாய்ச்சி உளவுத் தொழிலைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் விளக்குகின்றது.


செய்யுள் 6 
மள்ளர் காலி முளைத்தனர் களிப்பால்
        "ஏர்தரு மூரியேறு மிருங்கடா வினமுங் கட்டிக்
         கூர்நு திக் கொழுக்க ளாழ வுழவர வுழுது கோட்கள்
         சீர்தரு நாளில் வானோர்க் கிறைவனாந் தெய்வம் போற்றிக்
         கார்நிற மள்ளர் சாலி முளைத் தனர்க ளிப்பால்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)

    ஏரில் பூட்டத்தக்க வலிமையான எருதுகளையும், பெரிய எருமைக் கடாக்களையும், ஏரில் பூட்டி, கூர்மையான நுனி கொண்ட கொழுக்களால் ஆழமாகவும், நெருக்கமாகவும் உழுது, கோள்கள் சரியான நிலையில் இருக்கும் நல்ல நாளில் வானோர்க்கு இறைவனான தேவேந்திரனைப் போற்றித் தொழுவது கருமை நிற வண்ணம் கொண்ட மள்ளர் குலத்தார் மகிழ்ச்சி போங்க நாற்றாங்கால் நாற்று முளைத்து வளர நெல் விதைத்தனர்.

செய்யுள் 8 
மள்ளர் தம் சொற்ப்பொழிவால் சமய வேறுபாடு களைதல்
        "அறநெறி யெய்து செல்வா மாமென வளர்ந்த நாற்றை 
         மரநெறிக் கூற்ற மள்ள வாள்விழிக்   கடைசி மாதர்
         முறநெறி செவிமா லியானை முரண்டரு மள்ளர் சொல்லாற்
         பிற பிற சமைய போதம் பிரித்தாற்போல் பெயர்த்தா ரன்றே"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.201 .)

    அற வழியில் மள்ளர் விதை விதைத்து வளர்த்த நாற்றை படை வீரர்களில் கடும் நெறி கூற்றுவன் போல், வாள் விளிக் கடைசியரான மல்லத்தியர் பிடுங்கினார்கள். முறம் போன்ற காதுகளையுடைய செழிப்பு மிக்க பெரிய யானை போன்ற வலிமை மிக்க மள்ளர் தமது சொற்ப்பொழிவால்  பிற சமய வேறுபாடுகளைக் களைந்து எறிவது  போல்,மள்ளர்க மகளின் நாற்றுகளைப் பறித்தெடுத்தனர்' என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் உவமை காட்டி விளக்குகின்றது.


செய்யுள் 10
மள்ளத்தியரின் கொலை விழிக்கு அஞ்சி ஓடும் பகைவர்கள்
        "பதித்திடு நாறு வீறி யெழுந்திடும் பருவ நோக்கி
         மதித்திடு மள்ளர் சொல்லான் மள்ளிய ரெல்லாங் கூடிக்
         குதித்திடுஞ் சேர்கள் கூர்வேற் கொலை விழிக் கஞ்சியோட
         வுதித்திடு பகைபோற் றோன்றுங் களைகளைக் களைத லுற்றார்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.202 .)

    நட்ட நாற்றுகள் செழிப்புடன் உயர்ந்து எழுந்திடும் காலத்தில் உலகத்தார் மதித்திடும், மள்ளர் சொல்லத் துள்ளிக் குதித்திடும் மீன்கள் போலக் கண்கள் கொண்ட மள்ளத்தியரெல்லாம் கூடிக் கூறிய வேலின் கொலைத் தன்மையுள்ள, பார்வைக்கு அஞ்சியோடும் பகைவரிடம் தோன்றும் பகைபோல, வயல்களில் வளர்ந்த கலைகளைப் பிடுங்கி எறிந்தனர்.

செய்யுள் 13 
மள்ளர் நெல்லளத்தல்
        "காரெலாஞ் சேர்த்துக் கட்டுந் தகுதியோர் கடாக்கள் கட்டிப்
         போரலாம் பிரித்துத் தள்ளி யடித்ததிற் பதடி போக்கிச்
         சீரெலாஞ் சிறந்த மள்ளர் தூற்றிநெற் கூட்டிச் சேர்த்துப்
         பாரெல்லாம் புகழ்க ணேசர்ப் பணிந்து பின் னளந்தா ரன்றே"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.203 .)

    கருமை வண்ண மேகத்தைஎல்லாம் கூட்டிச் சேர்த்துக் கட்டினார் போல் கரிய வண்ண எருமைக் கடாக்களைத் தாம் பில் கட்டி வைக்கோல் போரைப் பிரித்து நிலத்தில் கிடத்திப் போரடித்துத் தூற்றிப் பதர்களைப் போக்கி நெல்லைக் கூட்டிச் சேகரிக்கும், பெருமைகளில் சிறந்த மள்ளர் குலத்தார் உலகம் புகழும் கணேசரைத் தொழுது பின் நெல்லை அளந்தார்கள் என்கிறது மேற்கொண்ட செய்யுள்.

சீவலமாற பாண்டியனின் சங்கர நாராயண சுவாமி கோயில் புராணம் மள்ளர் வரலாற்றை மாண்புடன் எடுத்துரைக்கின்றது. கல்வெட்டுச் செய்திகளும், கள ஆய்வு செய்திகளும், புராண செய்யுள்களும் பாண்டிய மரபினர் பள்ளர்களே என்று பரிந்துரை செய்கின்றது. பாண்டியராட்சி முடிவுற்ற போது அவர் தம் மரபினரான பள்ளர்களுக்கு இருந்த பேரளவிலான உரிமை மறுக்கப் பட்டுப் பெயரளவிலான உருமை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.