குடும்பரும் மூவேந்தரும்

குடும்பரும் மூவேந்தரும் --- 

கல்வெட்டில் குடும்பன்




  • இன்றைய கேரளாவில் வயநாடு பகுதியில் எடக்கல் என்ற ஊருக்கு அருகே உள்ள ஒரு மலைக்குகைக் கல்வெட்டு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டு பழமையுடையது. அக்கல்வெட்டில், 
                 "விஷ்ணு வர்மம குடும்பிய குல வர்த்த நஸய லிகித"

         என்று சேர வேந்தன் விஷ்ணு வர்மனின் குடும்பிய குளம் பற்றிக் கூறுகிறது. (இந்திய தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1897 , எண்.120 -123 HULTSCZH )

  • கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூர் திரு மருதுடையார் கோயில் கல்வெட்டில்,

                 "கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்கன்
                  சோழனான இராஜராஜதேவன்"

          என்று தென் குடும்பரான இராசராசசோழனால் நிலக் கோடை வழங்கப் பட்டதாக கூறும் கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணனின் 7 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது.

  • தற்காலத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் பூலாங்குறிச்சி. இவ்வூரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் உள்ள ஒரு பெரும் பாறையில் சுமார் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் நடுவில் உள்ள கல்வெட்டு முற்றிலுமாக அழிந்து விட்டது. இடப்பக்கம் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. வலப்பக்கம் உள்ள கல்வெட்டு மட்டுமே தெளிவாக உள்ளது. அக்கல்வேட்டுச் செய்தி வருமாறு:


            "இக்கோயில்களில் பச்செறிச்சில் மலைமேல் செய்வித்த தேவகுலத்து குழலூர்த் துஞ்சிய உடையாரால் வேற்கூரில் பெறப்பட்ட குடும்பியர் பரம்பரையல்லது வேற்றார் தவிர்க்கப்பட வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

  • புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குடிமியாமலை குடுமிநாத சுவாமி கோயிலில் இரண்டாம் கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
             "ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்ம்ரான திறபுவனச் சக்கிரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 27 ஆவது ஆவணிமாதம் 2 தியதி நாள் தென் கோனாட்டு சிகாநல்லூர் குடுமியார் உதையப் பெருமாள் உள்ளிட்டாற்கு புல்வயல் அஞ்சுநிலை ஊராக இசைந்த ஊரவரோம் தீர்வு முறி குடுத்த பரிசாவது முன்னாள் இவர் ஊர்....."

  • கோயமுத்தூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் கோவில் யாளிக் கல்லில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு கோனாட்டான் வீரசோழனின் 37 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
             "தென் குடும்பரான கோனாட்டான் வீரசோழன்" ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பல்லியில் அருக தேவருக்கு அளித்த நிலக் கோடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

  • கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், கடத்தூர் கொங்கவிடங்கேசுவரர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கி.பி.1233 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
             "கரை வழிநாட்டு ஏழூர் தென் குடும்பரில் ஆரியன் உலகுய்ய வந்தனான வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையன்" கண்ணாடிப் புத்தூரில் உள்ள தன நிலத்தைக் கோவிலுக்கு அளித்து அதன் வருவாயில் ஐப்பசி மாதச் சிறப்புப் பூசைகள் நடக்க ஏற்பாடு செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.

  • கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பாதையில் செலக்கிரிசல் என்ற ஊர் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே கருவேலங்குட்டை,வெள்ளைமேடு என்ற இடங்கள் உள்ளன. வெள்ளை மேட்டில் பழைய பானை ஓடுகள் நிறைந்து கிடக்கின்றன. இங்கேதான் பொற்காசுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. பாண்டிய வேந்தர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. இங்கே உப்பக் காய்ச்சியதனால் இதற்க்கு உப்பிலியன் திட்டு எனவும் பெயருண்டு. செலக்கரிசலில் உள்ள ஈசுவரன் கோயில் முன் சுமார் 4 கல்வெட்டுத் துண்டுகள் கிடக்கின்றன. அதிட்டானப் பகுதியைச் சேர்ந்த கற்கள் இவை. கி.பி.13 -14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் அக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் துண்டில் வெட்டப்பட்டுள கல்வெட்டு வரிகள் வருமாறு: 

             " ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குயாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலை வாகனையும், பொங்கலூர்க்கால் நாட்டுக் கீரனூரில் இருக்கும் ஐங்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமையான அணுத்திரப் பல்லவரசி தன்மம்"

          என்று குடும்பர்களைப் போன்று குடுமிச்சிகளும் அரசிகளாக இருந்து ஆண்ட வரலாற்றை மேற்கண்ட கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.

  • ஈரோடு மாவட்டம், குண்டடத்தில் உள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,
               "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராசேந்திர தேவற்குயாண்டு பதினொன்றா வதுகேதிராவது பொங்கலூர்க்கா நாட்டின் குண்டொடத்திற் குடுமிச்சிகளில் சிங்கன் கோவியாந அங்கராயன் மனைக்கிழத்தி குண்டொடத்தில்"

         என்று இக்கல்வெட்டும் குடுமிச்சிகள் பற்றிக் கூறுகிறது.

  • கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாரியூர் தென்னந்தோப்பு உப்பளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு குடும்பன் வில்லியம் பலவணானான சித்திரவல்லியின் உப்பளம் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 41 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
                ".....கோவிராஜ கேசரிபன்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 41 -வது இது ..... க்கு வார் திருவாணை நாஞ்சி நாட்டு சுந்தர சோழ சதுர்வேதி மங்கலத்து சுசீந்திரமுடைய மகாதேவர்க்கு பெருமாள் திருமேனி கலியாண திருமேனியாக இராசாதிராசப் பாண்டி நாட்டு உத்தம சோழ வள நாட்டு அமரபுரி மங்கலத்து பொன் பற்றி உடையான் அரையன் மூவாயிரத்தொருவனான குருகுலவராயன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. இவ்விளக்குக்குப் புறந்தா நாட்டு வாரியூரான பராக்கிரம சோழப் பேராத்து குடும்பன் வில்லியம் பலவானான இரண்டாயி.... சித்திரவல்லி பணியில் இரண்டு பாத்தி சந்திராதித்தவற் விலை கொண்டு குடுத்த குலோத்துங்க சோழன் திருநுந்தாவின்....." (Trivancore Archaelogical Series Vol.1, Edited by T.A.Gopinatha Rao, Dept. of Cultural Publications, Govt. of Kerala, Reprinted in 1988, pg.355-356.)

  • தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இருவப்ப புறம் என்னும் ஊரில் 'பெரும்படைச் சாத்தான் கோயில்' உள்ளது. பெரும்படைச் சாத்தான் என்றால் பெரும்படை கொண்டு மக்களைக் காத்தவன் என்று பொருள். இக்கோயில் பள்ளர்களின் குல தெய்வ முன்னோர் வழிபாடாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
              "1815 ஆம் ஆண்டு கீதட்டா பாறை சுப்ப குடும்பன் மகன் கரை அடி ஊர் கோடாங்கி இருள குடும்பன் ஸ்ததிரி ஆள்வார் சாத்தாவுக்கு உபயம் ரூ.75 /- கோவில் கோடாங்கி" (பழங்காசுகள், காலாண்டிதழ், ஏப்ரல் 2002 , ப.21 )

    இருவப்புரம் பெரும்படைச் சாத்தான் கோயிற் பூசாரிகளான சுப்பக் குடும்பனும், அவரது மகன் இருளைக் குடும்பனும், பெரும்படைச் சாத்தானை வழி வழியாக வழிபாடு செய்து வந்துள்ளனர். இவ்விருவரும் அக்கோயிலில் தங்களது உருவச் சிற்ப்பங்களையும், கை குவித்து வணங்கி நிற்கும் நிலையில் அமைத்துள்ளனர். இவ்வாறு கோயில் திருப்பணிகள் செய்கிறவர்கள் தங்கள் சிலைகளைக் கோயிலில் வைக்கும் மரபினை முதன் முதலாகத் தொடங்கியன் இராசராச சோழனாவான். இசசோழ வேந்தன் தஞ்சை பெருவுடையார் கோயிலில் தனது உருவம் பொறித்த செம்புச் சிலையினை அமைத்தான் என்று அங்குள்ள கல்வெட்டுச் செய்தி கற்பிக்கின்றது. அதைப் போன்று மதுரை மீனாட்சி கோயில், பேரூர் பட்டீசுவர் கோயில் முதலிய கோயில்களில் திருப்பணிகள் செய்த பள்ளர்கள் அந்த அந்தக் கோயில்களில் சிற்ப்பங்களாக செதுக்கப்பட்டு நிற்கும் காட்சிகளைக் காணலாம். 

    இப்படியாக இருவப்புரம் பெரும் படைச் சாத்தன் கோயிலி சுப்பக் குடும்பனும், இருளைக் குடும்பனும் கழுத்தணிகளையும் குடுமிக் கொண்டை முடித்து சடையை விரித்த நிலையில் காதுகளில் குண்டலங்களும், இடையிலிருந்து கணுக்கால் வரை பஞ்சகச்ச ஆடையும், கைகளில் கடகமும், விரல்களில் கணையாழியும், தோள் பட்டைகளில் வாகுவளையும் அணிந்து காணப்படுவது பள்ளர்களின் மேன்மையை விளக்குவதாய் உள்ளது.

  • திண்டுக்கல் மாவட்டம், பழனி வாட்டம், கீரனூர் கல்வெட்டு பொன் அணிகலன்களை திருவாகீசுவர முடையார் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்த குடும்பர் பற்றிக் கூறுகிறது. கல்வெட்டுச் சொற்றொடர் வருமாறு:
            "கீரனூரான கொழுமங்கொண்ட சோழ நல்லூர் உடையார் குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளன் மணவாட்டி இளையாண்டி"

  • கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சங்கிராமநல்லூர் சோழீசுவரர் கோயில் கல்வெட்டொன்று கோயிலுக்கு நிலக் கோடை வழங்கிய குடும்பரை "குடும்பர் அணுத்திரப் பல்லவரையன்" என்று பொரித்துள்ளது.

  • ஈரோடு மாவட்டம், குண்டடம் அமிர்தகடேசுவரர் கோயில் இடது நிலையில் உள்ள கல்வெட்டில் குடும்பர் பெயர் இடம் பெற்றுள்ளது. அக்கல்வெட்டு செய்தி வருமாறு:

           "ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு இயாண்டு பத்தாவது குண்டோடத்தில் குடும்பரில் இருங்கோளன் .....
            காவன்......நா......யா......கொங்கி......." என்றுள்ளது. (Annual Reports on Indian        Epigraphy (ARE) - 130/1920)


          இவ்வாறாக சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் நாடுகள் அனைத்திலும் குடும்பர்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 

6 comments:

  1. Woww..very rare and worthy information collection.!

    ReplyDelete
  2. காரமுடையர் , மேகமுடையர்.கற்குலமுடையார்,கன்னமுடையர்,பூலூடையர் இது எல்லாம் வீர நாட்டார் (மள்ளர்) வழிபடும் சாத்தன் பெயர்கள். முடையரா இல்லை உடையாரா ?...

    ReplyDelete
  3. Mallarkulathilvarinum iru Pallikor Pallakkanavan enpathai serkkavum

    ReplyDelete
  4. குடும்பர் வரலாற்றை மேலும் பதிவிடுக

    ReplyDelete